ஈரான்-இஸ்ரேல் மோதல்: நான்காவது நாளில் எரியும் மத்திய கிழக்கு
ஜூன் 16 அதிகாலை ஈரானின் தீவிர ஏவுகணைத் தாக்குதல்களுடன் இஸ்ரேல் நாள் துவங்கியது. தொடர்ந்து நான்காவது நாளாக மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இருநாடுகளும் மாறி மாறி நடத்தும் தாக்குதல்கள், உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
செவ்வாய்க்கிழமை நடத்திய இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ராணுவ உளவுத்துறைத் தலைவர் முகம்மத் கசேமி உள்பட நான்கு முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதுவரை கிடைத்த தகவலின்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டவர்கள், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈரானில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களாகும்.
அணு ஆயுத அச்சுறுத்தல்
இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிக்க ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்காவை ஈரான் தாக்கினால் முழு சக்தியுடன் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளார்.
டெல் அவிவில் கரும்புகை – இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள்
திங்கள்கிழமை அதிகாலை, ஈரான் ஒருங்கிணைந்த முறையில் டெல் அவிவ், ஜெருசலேம், பெட்டா டிக்வா நகரங்களை ஏவுகணைகளால் தாக்கியது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல்களுக்கு எதிராக ஏவுகணைகளை விடுத்தன. இந்த மோதலால் டெல் அவிவ் நகரம் கரும்புகையில் மூடப்பட்டது.
இஸ்ரேல் ராணுவம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது மகன் அவ்னரின் திருமணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு
ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தாலும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளது. “தாக்கப்படும் நேரத்தில் சமாதான பேச்சு முடியாது” என்றுதான் அவர்கள் நிலைப்பாடு.
அமெரிக்க தூதரகத்திற்கு சேதம்
டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறிய சேதம் சந்தித்தது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தூதர் மைக் ஹக்காபி உறுதி அளித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்
தாக்குதலுக்கு பதிலளிக்க, இஸ்ரேல் விமானப்படை தெஹ்ரானில் உள்ள ஐஆர்ஜிசி தளங்களை குறிவைத்து தாக்கியது. இந்த தளங்கள் ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் காட்ஸ், ஈரான் உயர் தலைவரை “கோழை” என்று விமர்சித்தும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மறுப்பு
ஈரான் அதிகாரி ஒருவர், “இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், பாகிஸ்தான் ஈரானுக்காக பதிலடி கொடுக்கும்” என்றார். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.
இந்திய தூதரக நடவடிக்கைகள்
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய தூதரகம், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைத்துள்ளதுடன், விரைவில் நாடு திரும்பச் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்கிறது.
பாலஸ்தீனத்தில் வன்முறை
மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், காசா பகுதியில் உணவு மையம் அருகே இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளின் பதில்கள்
போரத்தை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் முயலுகின்றன. பிரதமர் மோடி, “இது யுத்தத்துக்கான காலம் அல்ல; பேச்சுவார்த்தையே ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈராக் பகுதியில் உள்ள தனது குடிமக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசர்பைஜான், தைவான் உள்ளிட்ட நாடுகள், ஈரானில் சிக்கிய தங்களுடைய குடிமக்களை மீட்டுள்ளன.
அணு மோதல் அபாயம்
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கிய நிலையில், தற்போது ஏதும் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றாலும், சர்வதேச அணு முகமை மாசுபாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
தீர்மானக்கட்டத்தில் இஸ்ரேல்-ஈரான் மோதல். உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறிய இந்த மோதல், அணு போராக மாறுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.