ஜி7 தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக உள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டு, இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கனானாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சிமாநாடு தொடங்கியுள்ளது. அதன் முதல் நாளில் நடைபெற்ற அமர்வில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான பதற்றம் குறித்தும், அந்த நிலைமைக்கான அவர்களது பார்வையும், கருத்துகளும் கொண்ட அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் எண்ணத்தில் நாம் உறுதியுடன் இருக்கின்றோம். இஸ்ரேலுக்கு தன்னைத் தானே காப்பாற்றும் முழுமையான உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியமானது என்ற எண்ணத்தில், அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து துணைபுரிவோம். பொதுமக்களின் பாதுகாப்பும் மிகவும் அவசியமானது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “பிராந்தியத்தின் நிலைமையற்ற சூழலுக்கும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற முக்கிய ஆதாரமாகவும் ஈரான் திகழ்கிறது. அந்த நாடு அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பதில் எங்கள் நிலைப்பாடு உறுதியானதாகவே இருக்கிறது. ஈரானின் இந்தத் தாக்கம், காசா பகுதிகளில் போர்நிறுத்தம் உள்ளிட்ட பரந்த அளவிலான அமைதித் திட்டங்களை முன்னெடுக்கும் வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்பதையும் வலியுறுத்துகிறோம். உலக எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் நெருக்கமாக கவனித்து வருகிறோம். சந்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்ய, எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இஸ்ரேல், தெஹ்ரானில் உள்ள இராணுவ முகாம்கள், எண்ணெய் களங்கள், மின் மற்றும் குடிநீர் விநியோக மையங்களை குறிவைத்து மிகுந்த தீவிரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் தற்போது வரை 224 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும், 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், ஈரானின் ஆயுத களஞ்சியங்கள் மற்றும் அணு உற்பத்தித் தளங்களை தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக தாக்கி வருகிறது.
இந்நிலையில், இன்று ஈரான், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள மொசாட் உளவுத்துறை அலுவலகத்தை குறிவைத்து ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலில் சில ஏவுகணைகள் அந்த வளாகத்தில் விழுந்து வெடித்து தீப்பற்றியுள்ளன.
மேலும், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய இராணுவ தளபதி அலி ஷத்மானி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.