ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல், செர்னோபில் போன்று ஒரு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதென ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவ தகவல் தொடர்பு பிரிவு, புஷேர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டதாக முதலில் தெரிவித்தது. ஆனால் பின்னர், ஒரு இஸ்ரேலிய ராணுவ உயர் அதிகாரி அந்த அறிக்கையை தவறானதென மறுத்தார். இருப்பினும், அந்தத் தாக்குதல் நடைபெற்றதையோ இல்லையோ உறுதியாகச் சொல்ல முடியாது என இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம், இஸ்ரேலின் தாக்குதல் பெரும் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று கவலையுடன் தெரிவித்துள்ளது.
புஷேர் அணுமின் நிலையம், ஈரானில் செயல்பட்டு வரும் ஒரே அணுமின் மையமாகும். இது ரஷ்யா சார்பாக கட்டப்பட்டதாகும். இன்று அதிகாலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி திட்டங்களைத் தடுக்க முயற்சித்தாலும், புஷேர் தளத்தில் பணியாற்றும் மாஸ்கோவின் தொழிலாளர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள் என இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நிபுணர்கள் பாதுகாப்புக்காக, அந்தத் தளத்தின் மீது நடைபெறும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.