ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியனுடன் தொலைபேசி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பதற்றங்களை குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக போர்முனை சூழ்நிலை காணப்பட்டு வந்த நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக அமெரிக்கா ஈரானை தாக்கியுள்ளது. இதனால் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் விரிவாக பேசினார். உரையாடலின் போது, சமீபத்திய நிலைமைகள் குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
போரின் தீவிரம் குறைய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிராந்தியத்தில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இது அவசியமானது என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் வெளியிட்ட பதிவில், “ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய சூழ்நிலை குறித்தும் சமீபத்திய மோதல்களின் விளைவுகளையும் விவாதித்தோம். நான் வெளிப்படுத்திய ஆழ்ந்த கவலைக்கு பதிலளித்த அவர், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பது முக்கியம் என்பதில் ஒருமித்தமான நிலைப்பாட்டை பகிர்ந்தார். பேச்சுவார்த்தை வழியாக விரைவில் தீர்வை காண வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தாக்குதலுக்கு சீனாவின் கண்டனம்:
அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதலை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா. சாசனத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் இது நேரடி மீறல். மேற்கு ஆசியாவில் பதற்றத்தை இது மேலும் தீவிரமாக்கும்,” என தெரிவித்தார். மேலும், மோதலில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்புகளும், குறிப்பாக இஸ்ரேல், உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரையாடலைத் தொடங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கண்டனமும் தொடர்கிறது:
அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் பிரதேசத்தை ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளால் தாக்குவது, எந்தவிதமான வாதங்களாலும் நீதிபடுத்த முடியாது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா, இவ்விதமான நடவடிக்கையில் ஈடுபடுவது மிக ஆபத்தான முன்னுதாரணமாகும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.