ஈரானின் எச்சரிக்கை: ஹோமுஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம்
அமெரிக்காவின் தாக்குதலால் கடும் கோபமடைந்த ஈரான், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பாதை எனக் கருதப்படும் ஹோமுஸ் ஜலசந்தியை முடக்கும் முடிவை எச்சரிக்கையாக அறிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்குவதில் ஈரான் தீவிரமாக உள்ளது எனக் கூறி, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரானின் முக்கியமான மூன்று அணுசக்தி நிலையங்களை குண்டு வீசி தாக்கியது. இந்த தாக்குதல்கள், ஈரானுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமாக பயன்படும் ஹோமுஸ் ஜலசந்தியை மூட வாய்ப்பு உள்ளதாக ஈரான் கூறியுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் இந்த வழியைப் பயன்படுத்தி எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன.
உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் 20 சதவீதம் ஹோமுஸ் வழியாகவே கடந்து செல்கிறது. தினமும் சுமார் 1.8 கோடி பேரல் எண்ணெய் இங்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஈரானுக்கு தடைகள் விதித்தபோது கூட, இந்த வழித்தடத்தை மூடப் போவதாக மிரட்டியிருந்தாலும், ஈரான் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தற்போது, இஸ்ரேல் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளது. இந்த முறையில் ஜலசந்தி மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்படும். குறிப்பாக இந்தியா தனது 40% கச்சா எண்ணெயும், 50% இயற்கை எரிவாயுவும் இந்த வழியாகவே பெற்றுக்கொள்கிறது.
இதனால் இந்தியாவுக்கும், ஒபெக் நாடுகளுக்கும் பெரும் தாக்கம் ஏற்படும். இஸ்ரேல்-ஈரான் போரால் ஹோமுஸ் வழியாகச் செல்லும் 1,000 கப்பல்களின் ஜிபிஎஸ் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் அமெரிக்க கடற்படை பஹ்ரைனில் முகாமிட்டுள்ள நிலையில், வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.