இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் விமான தளங்கள் அழிப்பு: நிலைமை பரிதாபம்
இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படைத் தளங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அதேசமயம், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் தீயில் எரிந்து நாசமாகின. இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நின்ற நிலையில், ஈரான் ரஷ்யாவிடம் ஆயுத உதவி கோரியுள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்கள் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியதால், அந்த தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் நகரங்கள் டெல் அவிவ், ஹைபா, ஆஸ்டோட் உள்ளிட்ட பகுதிகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல். பேட் யாம் பகுதியில் வசிக்கும் இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் தாக்கியதாகவும், அவர்கள் வசிக்கும் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மின் நிலையம் சேதம் – இருளில் நகரங்கள்
தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ஏவுகணை வீசியதில், மின் வழங்கல் தடைபட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கின.
“50,000 அமெரிக்க வீரர்களை கொல்வோம்” – ஈரான் எச்சரிக்கை
ஈரான் ராணுவ வட்டாரங்கள், “அமெரிக்க ராணுவ முகாம்களில் இருக்கும் 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் குறிவைக்கப்படுவார்கள்” என கடுமையாக எச்சரித்துள்ளன. ஈரான் மதத் தலைவர் கொமேனியும், “இஸ்ரேல் பெரிய தவறு செய்துள்ளது. கடுமையான பதிலடி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
950 பேர் உயிரிழப்பு – மனித உரிமை அமைப்புகள் தகவல்
இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை ஈரானில் 950 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,450 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் சிறை மீதும் தாக்குதல்
டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. தப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
அணுசக்தி தளத்தின் மீது மீண்டும் தாக்குதல்
போர்டோ அணு சக்தி தளம் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா B-2 போர் விமானங்கள் மூலம் 14,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியது. இந்த தாக்குதலால் அணு தளம் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்.
சர்வதேச கண்டனம்
சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் ரஃபேல் குரோஸி, “அணு தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த கூடாது. இதனால் மாபெரும் பேரழிவு ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவை சந்தித்து ஆயுத உதவி கோரியுள்ளார்.