இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
வரி விகிதம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதில், முதல்கட்டமாக 25% வரி கடந்த 7ம் தேதி அமலுக்கு வந்தது. மீதமுள்ள 25% வரி வரும் 27ம் தேதி முதல் அமலாகும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “வரி விகிதம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை, இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று கூறினார்.
அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு — ஸ்மார்ட்போன், கணினி, மருந்துகள், சில உலோகங்கள் மற்றும் கனிமங்கள் — 50% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் போன்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால், இந்தியாவின் ஜவுளி, நகைகள், வைரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் (பொருளாதார உறவுகள்) தாமு ரவி கூறியதாவது: “அமெரிக்காவின் வரி விதிப்பு தற்காலிகமான பிரச்சினை. விரைவில் தீர்வு காணப்படும். மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த நாடுகளுக்கு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்” என்றார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.31,500 கோடி மதிப்பில் பி-81 போர் விமானங்களை வாங்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருந்த நிலையில், அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நேற்று செய்தி வெளியிட்டது.
மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வாஷிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், “இந்த செய்திகள் தவறானவை. அமெரிக்காவுடன் பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத கொள்முதல் நடவடிக்கைகள் வழக்கம்போல தொடர்கின்றன” என்று விளக்கம் அளித்துள்ளன.