காசாவிலிருந்து துருக்கி தப்பிச் சென்று மறுமணம் செய்த ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். 2011 ஆம் ஆண்டு அவர் சமர் முகமது அபு ஜாமருடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார்.
அவரது மனைவி சமர், குழந்தைகளுடன் வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து துருக்கிக்கு சென்று வசித்து வந்த அவர், கணவரின் மரணத்திற்கு பிறகு அந்நாட்டு நபரை மறுமணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக போக்குவரத்து வசதி, உயர்மட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு, மேலும் அதிக பணமும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சின்வர் உயிரிழந்த பின் அவரது சகோதரர் முகமது சின்வர் ஹமாஸ் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் அவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கிடையில் முகமது சின்வரின் மனைவி நஜ்வாவும் ரபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேறியதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அவர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. இவ்விரு பெண்களுமே தங்கள் கணவர்களின் மரணத்திற்கு முன்னரே காசாவை விட்டு சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் போர் தொடர்ந்து 21 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 59 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.