இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்: டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநராக பணியாற்றி வரும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமித்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அதிபர் அலுவலகத்தில் பணியாற்றும் செர்ஜியோ கோர், ட்ரம்பின் நெருங்கிய துணைவர் எனக் கருதப்படுகிறார். இவரை இந்திய தூதராக நியமித்ததை சமூக ஊடகங்களில் அறிவித்த டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது:

“செர்ஜியோ கோர் எனது மிகச்சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக எனது பக்கத்தில் இருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு பதவி உயர்வு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகச் செயல்படுவார்,” என்றார்.

சிறப்பு பொறுப்பு:

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் செர்ஜியோ கோர் சிறப்பு தூதராகவும் செயல்படவுள்ளார். அவர் தலைமையில் உள்ள குழு, அமெரிக்க அரசுத் துறைக்கான 4,000 அதிகாரிகளை குறித்த காலத்துக்குள் தேர்ந்தெடுத்தது. தற்போது, அமெரிக்காவில் உள்ள காலிப்பணியிடங்களில் 95% நிரப்பப்பட்டுள்ளது.

மேலும், தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்திலும், செர்ஜியோ கோர் முக்கிய பங்காற்றினார். தனது மிகப் பிரபலமான புத்தகத்தையும் வெளியிட்டவர் செர்ஜியோ கோர் என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

“எனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று, அமெரிக்காவை மீண்டும் வலுவாக மாற்றும் பணியில் அவர் சிறந்த தூதராக இருப்பார் என நம்புகிறேன். அவருக்கு வாழ்த்துகள்,” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box