ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,423-ஆக அதிகரிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜலாலாபாத் அருகே பூமிக்குள் சுமார் 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால், குனார் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலும் மண், கற்கள், பாறைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தால் சிதறி இடிந்து விழுந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்பு குழுவினரும், உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்திய தகவலின்படி, குனார் மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆகவும், நங்கர்கர் மாகாணத்தில் 12 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 1,423-ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை இரு மாகாணங்களிலும் சேர்த்து சுமார் 3,500-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்:
“தொலைவிலுள்ள கிராமங்களில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறோம். ஆனால், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் இன்னும் சில கிராமங்களுக்கு எங்கள் மீட்பு குழுவினர் சென்று சேர முடியாமல் இருக்கிறது” என்றார்.