தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னணியில் அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமூக வலைதளங்கள் பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு நேபாள அரசு திடீர் தடையை விதித்ததை எதிர்த்து, ஆட்சியாளர்களின் ஊழலை கண்டித்து நேற்றைய தினம் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்தது. இதையடுத்து, நேபாள காங்கிரஸ் பிரதமர் ஷர்மா ஒலி அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள காங்கிரஸ் தலைவரான வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி, பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேவேளை, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் அரசாங்கத்தின் போராட்ட நடவடிக்கைகளுக்குத் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்தார்.

காத்மாண்டுவிற்கு அப்பாலும் போராட்டங்கள் பரவியதால், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். லால்பாண்டி நகராட்சி அலுவலகத்திற்கு தீ வைத்து, பல இடங்களில் போலீஸ் வாகனங்களுக்கு கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ஷர்மா ஒலி, பிரச்சினைக்கு தீர்வு காணவும், அரசியல் ரீதியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாள உச்சநீதிமன்றம் சமூகவலைதள நிறுவனங்கள் பதிவு செய்யவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், நேபாள அமைச்சரவை கடந்த மாதம் சில சமூக வலைதளங்களுக்கு தடையை விதித்தது. ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடிகளை காரணமாகக் காட்டி, கடந்த ஜூலையில் டெலிகிராம் செயலியை தடையிட்டது.

இதனை எதிர்த்து, இளைஞர்கள் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் எடுத்தது. ஆனால் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இதனால் நேபாள காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Facebook Comments Box