ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை
ஆப்கானிஸ்தானில் மேலும் 5 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இத்தடை நடைமுறையில் வந்தது. மாகாண அரசு இதை ஒழுக்கக்கேட்டை தடுக்கும் நடவடிக்கையாக விளக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலிபான் தலைவரின் உத்தரவின் பேரில் பாக்லான், பதக் ஷான், குண்டுஸ், நங்கர்ஹர் மற்றும் தகார் மாகாணங்களிலும் நேற்று முன்தினம் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தலிபான்கள் 2021 ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இதுவே முதல் முறையான நடவடிக்கை. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது; மொபைல் இணைய சேவை தொடர்ந்து இயங்குகிறது.
மாகாணங்கள் கூறியதாவது, ஒழுக்கக்கேடான செயல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்று ஏற்பாடுகள் வழங்கப்படும். இந்த தடையை ஆப்கானிஸ்தான் ஊடக ஆதரவு அமைப்பும் கண்டித்துள்ளது. அமைப்பு தெரிவித்ததாவது, “தலிபான் தலைவரின் உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை லட்சக்கணக்கான மக்களின் தகவல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பெறுவதை மட்டுமல்லாமல், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக பணிக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.”
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் 1,800 கி.மீ.க்கு மேல் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் உள்ளது என்றும், மேலும் 488 கி.மீ.க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.