தைவானில் அதி தீவிர புயல்: ஏரி உடைப்பு காரணமாக 14 பேர் உயிரிழந்தனர்; 124 பேர் மாயம்

தைவானை தாக்கிய ‘ரகாசா’ அதி தீவிர புயல் மற்றும் கனமழை காரணமாக பழமையான ஒரு ஏரி உடைந்தது. இந்த நிகழ்வில் 14 பேர் உயிரிழந்தனர், மேலும் 124 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த புயல் நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் ஏற்பட்டது. உடைந்த ஏரி ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் பெரும் தண்ணீர் நகரத்துக்குள் புகுந்து வீடுகளின் முதல் தளம் வரை சேறும், சகதியும் சூழ்ந்தது.

ஹுவாலியன் கவுண்டி அரசாங்க செய்தித் தொடர்பாளர் லீ குவான்-டிங், “ஏரி உடைப்பு காரணமாக 14 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். மேலும் 124 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரகாசா’ புயல் காரணமாக தைவான் முழுவதிலும் 7,600 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

உள்ளூர் வாசிகள், “ஏரியில் ஏற்பட்ட உடைப்பு எரிமலை வெடிப்பது போல் இருந்தது. வெள்ளம் எங்கள் வீட்டின் முதல் தளத்திற்குள் நேராக பாய்ந்தது. சில நிமிடங்களில் முதல் மாடியில் பாதியளவு தண்ணீர் உயர்ந்துவிட்டது” எனக் கூறினர்.

ஜூலை முதல் அக்டோபர் வரை தைவானை அடிக்கடி வெப்பமண்டல புயல்கள் தாக்குகின்றன. கடந்த ஜூலை தொடக்கத்தில் ஏற்பட்ட ‘டனாஸ்’ புயல் 50 சென்டிமீட்டருக்கும் மேற்பட்ட கனமழை பெய்ததால், இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box