பாகிஸ்தானில் ‘கலப்பின மாடல்’ ஆட்சி உள்ளது – பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புதல்
பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்த கலப்பின மாடல் ஆட்சி நிலவுகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூயார்க்கில் பிரிட்டிஷ்–அமெரிக்க பத்திரிகையாளர் மேஹ்தி ஹசனுக்கு அவர் அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்து நாட்டை வழிநடத்துகின்றன. இதை ஒரு கலப்பின மாடல் எனக் குறிப்பிடலாம்” என்று முன்பே கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, மேஹ்தி ஹசன் கேள்வி எழுப்பினார்.
“பாகிஸ்தானில் விசித்திரமான அமைப்பு உள்ளது. நீங்கள் அதை கலப்பின மாடல் என அழைத்தீர்கள். இரு தரப்பும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கின்றன எனக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் ராணுவத் தலைவர்தான் அதிகாரம் வகிக்கிறாரே? பெரும்பாலான நாடுகளில் ராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சருக்கு பதிலளிப்பார். ஆனால், பாகிஸ்தானில் நீங்கள் உங்கள் ராணுவத் தளபதிக்கு பதிலளிக்க வேண்டிய நிலைதானே? அசிம் முனிர் உங்களை விட சக்திவாய்ந்தவர் அல்லவா?” என்று அவர் கேட்டார்.
இதற்கு கவாஜா ஆசிப், “அது உண்மையல்ல. நான் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவன். நான் ஒரு அரசியல் பணியாளர்” என்று பதிலளித்தார்.
அப்போது மேஹ்தி ஹசன், “அமெரிக்காவில் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அதிக அதிகாரம் உள்ளது. அவர் நினைத்தால் ராணுவத் தளபதியை பணிநீக்கம் செய்ய முடியும். ஆனால் பாகிஸ்தானில் அது சாத்தியமில்லை அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கவாஜா ஆசிப், “அமெரிக்க ஆட்சிமுறை வேறுபட்டது. அது ‘டீப் ஸ்டேட்’ என அழைக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
அதற்கு மேஹ்தி ஹசன், “உங்கள் நாட்டில் டீப் ஸ்டேட்தான் ஆட்சியை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
அதற்கு கவாஜா ஆசிப், “கடந்த கால அரசியல் தலைமையே அதற்கு காரணம். எங்கள் ராணுவ ஆட்சியாளர்களாலும் அது அதிகமாகத் தெரிய வருகிறது” என விளக்கமளித்தார்.
உண்மையில் பாகிஸ்தானின் அதிகாரம் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு, “இது கலப்பு அதிகாரம்” என அவர் பதிலளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, ட்ரம்ப் அவருக்கு விருந்தும் அளித்தார். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்ப்பை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு சென்றபோது கூட அசிம் முனிர் உடன் சென்றார். இதனால் பாகிஸ்தானின் சிவில் தலைமை அதிகாரம் குறித்த கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் சிவில் தலைமை மற்றும் ராணுவத் தலைமை இணைந்து நடத்தும் ‘கலப்பு ஆட்சி’ இருப்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே ஒப்புக்கொண்டது கவனிக்கத்தக்கது.