ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம்: இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 4 நாடுகள் ஆலோசனை
ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் இடம் பெற வலியுறுத்தும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தின் போது, ஜி-4 என அழைக்கப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியேரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
இந்த கூட்டம் தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“எனது சகாக்களான தகேஷி, ஜோஹன் வடேபுல், மவுரோ வியேரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை சீர்திருத்துவதற்கான உறுதிப்பாடு ஜி-4 குழுவின் ஆலோசனையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை செயல்முறை பற்றியும் மதிப்பீடு செய்யப்பட்டது” என்று கூறினார்.
இதனையடுத்து, இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் ஐ.நா. சீர்திருத்தம் தொடர்பான வலியுறுத்தல்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டன.
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்ரேஸ், “முந்தைய ஆவணங்களை வெளியிட முடியாத நிலையில் குழு இருந்தது. இதனால் கடந்த ஒரு வருடம் முதல் அடுத்த ஆண்டுக்குள் இதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நகரவில்லை. தற்போது குழு தீவிரமாக செயல்படுகிறது. முன்னேற்றம் காணப்படுவதாக நான் உறுதியாக கூறுகிறேன்” என்றார்.
உலகளாவிய தெற்கின் 42 நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கூட்டமைப்பான சி-10 நாடுகள் தொடர்ந்து ஐ.நா. சீர்திருத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.