பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: 32 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணம் நாட்டின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை கொண்டுள்ளது. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் தனி நாடுகளாக உருவானபோது பலுசிஸ்தானும் தனி நாடாக உருவெடுத்தது. ஆனால் 1948-ல் பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானை ஆக்கிரமித்தது. அப்போதுமுதல் பாகிஸ்தான் அரசுக்கும் கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த மாகாண மக்கள் நீண்ட காலமாக தனி நாடு கோரி போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறையில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலுசிஸ்தானின் அண்டை மாகாணமான கைபர் பக்துன்கவா மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தொடர்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாகாணத்தின் மாட்ரே தாரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானப் படை அண்மையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்களில் 30 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் துணை ராணுவப் படை தலைமை அலுவலகத்தை குறிவைத்து டிடிபி தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் செய்ய முயற்சி செய்தனர். வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் டிடிபி அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் எப்.சி. தலைமை அலுவலகம் நோக்கி விரைந்து சென்றனர். காரை பிரதான சாலையில் வந்தபோது குண்டு வெடித்து சிதறியது.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். 32-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 4 தீவிரவாதிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சமூக வலைதளத்தில், “டிடிபி தீவிரவாத அமைப்பு குவெட்டாவில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவின் உத்தரவின்படி செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, “குவெட்டாவில் துணை ராணுவ படை தலைமையகத்தைத் தாக்க டிடிபி தீவிரவாதிகள் திட்டமிட்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களின் கார் வெடித்துச் சிதறியது. டிடிபி மட்டுமல்ல பலுசிஸ்தான் விடுதலைப் படையும் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது” என்றனர்.