ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சார மானியங்கள் வழங்க வேண்டும், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

மூன்றாவது நாளாக நீடித்த வன்முறையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடுத்த நடவடிக்கைகள் மூலம் போராட்டக்காரர்களை கலைத்தனர். 12 பேர் கொல்லப்பட்டனர். டாடியால், முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளன.

பாதிக்கப்பட்டோரில் முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்கள், தீர்கோட்டில் ஐந்து பேர், தத்யாலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 29 முதல் போராட்டங்கள் தொடங்கிய பின்னர் சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல், இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. முசாபராபாத்தில் பேரணியை தடுக்க பாலங்களில் கற்கள் வைக்கப்பட்டுள்ளன; ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பெரிய கப்பல் கொள்கலன்களை கவிழ்க்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

நிலைமை மோசமடைந்த நிலையில், பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் அமைதியான தீர்வைக் காணவும் பேச்சுவார்த்தைக் குழு அமைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நசீர் அஜீஸ் கான், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook Comments Box