எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்ய அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலருக்கு உயர்த்தும் முடிவை அறிவித்ததை ரத்து செய்ய கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுகாதார நிறுவர்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பு, ட்ரம்ப் அறிவித்த எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்ய சான் பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் மனுவில் கூறியதாவது, “எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிட்டார். அதில், எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலருக்கு உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முன்பு 2,000 டாலர் இருந்த கட்டணத்தை 5,000 டாலருக்கு உயர்த்திய ட்ரம்ப், தற்போது இதை மேலும் பலமடங்கு அதிகரிப்பது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எச்1பி விசா திட்டம், வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான முக்கிய திட்டமாகும். இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிக்கிறது. முக்கிய துறைகளில் திறமையான பணியாளர்களை நியமிக்க இது உதவுகிறது.

அரசின் தற்போதைய முடிவால், மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களை, தேவாலயங்கள் போதகர்களை, கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை, நாடு முழுவதும் உள்ள தொழில்கள் முக்கிய கண்டுபிடிப்பாளர்களை இழக்கக் கூடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கான முன்கூட்டிய கணிப்புத் தன்மையை மீட்டெடுக்குமாறு கோரப்படுகின்றது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

எச்1பி விசா திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதிக திறமைகளை கொண்ட பணியாளர்களை அமெரிக்காவிற்கு ஈர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த விசாவை பயன்படுத்தும் தொழிலாளர்கள், மூன்றில் ஒருவர் செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்துறை மேற்பார்வையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box