2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
2025-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் சயின்ஸ் அகாடமி இன்று (அக்டோபர் 7) ஸ்டாக்ஹோமில் அறிவித்ததாவது, “மின்சார சர்க்யூட்களில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக” இவர்கள் மூவரும் பரிசுக்குரியவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கூறியதாவது: “நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் ஆல்ஃபிரட் நோபல் நினைவாக பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவ பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பான் சார்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு பரிசு வென்றவருக்கும் தங்க பதக்கம், பட்டயம் மற்றும் ரூ.1.03 கோடி மதிப்பிலான (11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்) ரொக்க பரிசு வழங்கப்படும். பரிசு வழங்கும் விழா ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும்.
கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திரக் கற்றலை முன்னேற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டதை நினைவுகூரலாம்.