மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி வைத்து, 2021-ம் ஆண்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்திற்கெதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது ராணுவத்தினர் பாராகிளைடர் மூலம் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக, ராணுவத்தினர் குண்டு வீசப்போகும் தகவல் கிடைத்து ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.