‘அமைதி அதிபர்’ – ட்ரம்புக்கு அடைமொழி கொடுத்து புகைப்படம் பகிர்ந்த வெள்ளை மாளிகை
அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்புக்கு வழங்கப்பட வாய்ப்பு இல்லாதது தெரியவந்த நிலையில், வெள்ளை மாளிகை தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்பின் அண்மைய புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு ‘அமைதி அதிபர்’ (The Peace President) என்ற அடைமொழியை கொடுத்து அழகு பார்த்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன் என்று மீண்டும் மீண்டும் மார்தாட்டிக் கொண்ட ட்ரம்ப், “நார்வேஜியன் நோபல் கமிட்டி எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை தராமல் இருப்பதற்கான காரணங்களை கண்டுபிடிக்கும்” என நம்பிக்கையிழந்து புலம்ப ஆரம்பித்தார்.
ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சூழலில்தான் ட்ரம்ப் தனது கனவான அமைதிக்கான நோபல் பரிசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர் ஒருவர் ட்ரம்பிடம், அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் பெற வாய்ப்பு உள்ளதா என்று கேட்க, ட்ரம்ப் கூறியதாவது:
“எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. மார்கோ ரூபியோவிடம் கேட்டால் நாங்கள் ஏழு போர்களை நிறுத்தியுள்ளோம் என்பதைச் சொல்வார். எட்டாவது போர் நிறுத்தம் நடக்கப் போகிறது. ரஷ்ய போரையும் விரைவில் நிறுத்துவோம். வரலாற்றில் இதுவரை இதுவரை இத்தனை போர்களை நிறுத்தியவர்கள் யாரும் இல்லை. ஆனால், நார்வேஜியன் நோபல் கமிட்டி எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காத காரணங்களை எப்படியோ கண்டுபிடிக்கும்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
ட்ரம்ப் இப்படி நம்பிக்கை இழந்த நிலையில், அவரது புகைப்படத்திற்கு வெள்ளை மாளிகை ‘அமைதி அதிபர்’ என்ற கேப்ஷன் கொடுத்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் பரிசு அவர் பெறவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அவரது முதல் பதவிக்காலத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க >> இரு போர்கள் மற்றும் சவால்கள்: ட்ரம்புக்கு ‘அமைதி நோபல்’ கிடைக்கும் சாத்தியம் உள்ளதா?