2025 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு!

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டில் ஜனநாயகத்தின் மலர்ச்சிக்காக தொடர்ந்து போராடி வந்த ‘இரும்புப் பெண்மணி’ மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நோபல் அமைதி பரிசுக்குத் தகுதியானவன் நான்” என்று அடிக்கடி கூறிவந்தபோதிலும், இந்த ஆண்டு அந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை.

ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்ட அறிக்கையில்,

“வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது பாடுபட்டு, நாட்டை சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுவிக்க உழைத்த மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 அமைதி நோபல் பரிசு வழங்கப்படுகிறது,”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை நார்வேஜியன் நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் வெளியிட்டார்.


யார் இந்த மரியா கொரினா மச்சாடோ?

மரியா கொரினா கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும், அவர் வெனிசுலாவை விட்டு வெளியேற மறுத்தார். இதனால் அவர் அந்நாட்டு மக்களிடையே ஒரு துணிச்சலான தலைவராக உயர்ந்தார்.

மரியா, வெனிசுலாவில் நிலவி வந்த ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, அமைதி வழியாக ஜனநாயகத்தை நிறுவும் முயற்சியில் முக்கிய பங்கு வகித்தார்.


338 பரிந்துரைகளில் இருந்து தேர்வு

இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்காக 338 பரிந்துரைகள் வந்தன. அதில் 244 தனிநபர்கள், 94 அமைப்புகள் என இரண்டு பிரிவுகளாக இருந்தன.

பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் ஜனவரி 31 ஆகும். நோபல் கமிட்டி உறுப்பினர்களும் தாங்களாகவே பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க முடியும், ஆனால் அது பிப்ரவரி மாதத்துக்குள் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு (2024) அமைதிக்கான நோபல் பரிசு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலில் உயிர் பிழைத்தோருக்காகப் பணியாற்றும் ஜப்பானின் ‘நிஹோன் ஹிதான்கியோ’ அமைப்புக்கு வழங்கப்பட்டது.


நோபல் பரிசு வழங்கும் துறைகள்

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு அமைதி பரிசு (அக்.10) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13 அன்று அறிவிக்கப்பட உள்ளது.


டிசம்பர் 10-ல் விருது வழங்கல் விழா

விருது பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் ₹1.03 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும்.

இந்த விழா நோபல் பரிசு நிறுவனர் ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

Facebook Comments Box