காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதற்கு பதிலடியாக காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. காஸா பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலில் 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.