தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் – முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நாட்டின் பாதுகாப்பிற்காக ஜம்மு-காஷ்மீரில் கடமையாற்றிய அவர், தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்தார்.
வினோத்குமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான வெம்பாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, ராணுவத்தினர் மற்றும் காவல்துறை மரியாதையுடன் அவரது மனைவி நர்மதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், 24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.