WhatsApp Channel
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யுவராஜ் சிங் மவுனம் கலைத்து விளக்கம் அளித்ததையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் சேர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகின்றனர். பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் வீரரான சித்து, பாஜக எம்பியாக இருந்தவர். அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து அமைச்சராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார்.
முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். மேலும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், அதிரடி பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் விரைவில் அரசியலுக்கு வரப் போவதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. யுவராஜ் சிங் பஞ்சாப்பைச் சேர்ந்தவர், தற்போது சண்டிகரில் வசிக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜகவில் இணைந்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் யுவராஜ் சிங் தரப்பிலிருந்து உண்மை அல்லது பொய் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாகவே அவர் பாஜகவில் நுழையப் போவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடுவதாக வெளியான செய்தி குறித்து யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊடகங்களில் தவறான செய்திகள் வருகின்றன. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. என் ஆர்வம் வேறு. பல்வேறு திறமைகள் உள்ளவர்களை ஆதரிப்பதும், உதவுவதும் தான். எனது YOUWECAN அறக்கட்டளை மூலம் அதை தொடர்ந்து செய்வேன்” என்றார்.
இந்த அறிவிப்பை யுவராஜ் சிங்கின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் யுவராஜ் சிங் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக அனைவருக்கும் பிடித்தவர். ஆனால் அவர் அரசியலில் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் மாற்றுக் கட்சியினர் கலக்கம் அடையலாம். இவ்வாறு ரசிகர்கள் கூறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், உலகக் கோப்பை நாயகனாக உங்கள் முடிவு வரவேற்கத்தக்கது என்று அவரது எக்ஸ் பதிவின் கீழ் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post