WhatsApp Channel
கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் பாஜகவின் முகங்களில் ஒருவர் சதானந்த கவுடா. பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்தவர். மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 2006ல் சதானந்த கவுடா கர்நாடக பாஜக தலைவராகவும் பணியாற்றினார். சதானந்த கவுடா 2011ல் கர்நாடக முதல்வராகவும் பதவி வகித்தார்.பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பல துறைகளை வகித்தார்.
ஆனால் வயது மற்றும் பிற காரணங்களால் சதானந்த கவுடா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட சதானந்த கவுடா விரும்பினார். ஆனால் பாஜக மேலிடம் அவருக்கு சீட் கொடுக்க மறுத்து விட்டது. இதனால் சதானந்த கவுடா கடும் அதிருப்தியில் உள்ளார்.
பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சதானந்த கவுடாவுடன் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து சதானந்த கவுடா காங்கிரசுக்கு தாவுவார் என கூறப்படுகிறது. பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதி அல்லது மைசூர் தொகுதிக்கான வேட்பாளராக சதானந்த கவுடாவை காங்கிரஸ் அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சதானந்த கவுடா கூறுகையில், பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் சேர அழைப்பு வந்தது உண்மைதான். எனது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன். மக்களவைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டவர்கள் பாஜக தலைமையிடம் பேச முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட ஈஸ்வரப்பா, சுயேட்சையாக போட்டியிடுவது தனது தனிப்பட்ட முடிவு என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அவர் இனி தேர்தல் அரசியலில் பங்கேற்கப் போவதில்லை; 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சதானந்த கவுடா அறிவித்திருந்தார். அப்போதும் சதானந்த கவுடா பாஜகவில் இருந்து விலகுவதாகவோ, அதிருப்தியில் உள்ளதாகவோ அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post