இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ராமாபுரத்தில் 33.33 மீட்டருக்கு யூ-கர்டர் நிறுவி சாதனை

0

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனைப் பதிவு! ராமாபுரத்தில் இந்தியாவில் மிக நீளமான யூ-கர்டர் நிறுவப்பட்டது

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 5-வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 44.6 கி.மீ. நீளப்பாதையின் ஒரு பகுதியாக, ராமாபுரத்தில் 33.33 மீட்டர் நீளமுள்ள யூ-கர்டர் நிறுவப்பட்டு, மெட்ரோ நிறுவனம் முக்கிய சாதனையை எட்டியுள்ளது.

116.1 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள இந்த திட்டம், மூன்று முக்கிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றது. அதில், 5-வது வழித்தடம் மாதவரம்–சோழிங்கநல்லூர் பகுதியாகும். இப்பாதையில், 5 சுரங்க ரயில் நிலையங்கள் மற்றும் 39 உயர்மட்ட நிலையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன.

இந்த வழித்தடத்தின் பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள், சுரங்க பாதைகள் மற்றும் உயர்மட்ட பாதைகளுக்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் ஆழ்வார் திருநகர் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலங்கள் உருவாகின்றன. மேலும், இந்த 5-வது வழித்தடம், 4-வது வழித்தடமான கலங்கரைவிளக்கம்–பூந்தமல்லி பாதையுடன் சில இடங்களில் இணைக்கப்படுகிறது.

இந்நிலையில், ராமாபுரத்தில் 33.33 மீட்டர் நீளமுள்ள யூ-கர்டர் ஒன்றை நிறுவி மெட்ரோ நிறுவனம் புதிய இந்திய சாதனையை எட்டியுள்ளது. இந்த யூ-கர்டர் 225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய கட்டுமான கூறாகும்; பொதுவாக உயர்மட்ட பாதைகள் மற்றும் பாலங்களின் தூண்களை இணைக்க பயன்படுகிறது.

மேலும், இந்த யூ-கர்டர் காங்கிரீட் பாலத்தின் ஒரு பகுதியாகவும், ஒரு தூணிலிருந்து மற்றொரு தூணுக்கு இடையில் கட்டமைக்கப்படும் ஸ்பான்களில் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்பானிலும் இரண்டு யூ-கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 யூ-கர்டர்கள் இணைக்கப்பட்டு, 33.33 மீட்டர் நீளத்துடன் நிறுவப்பட்டன.

இந்த முக்கிய நிகழ்வில், மெட்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் சி.முரளி மனோகரன் (உயர்மட்ட கட்டுமானம்), துணை பொதுமேலாளர் ஏ. ராமகிருஷ்ணன் (கட்டுமானம்), கே. பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here