‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால்
நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழியைப் பற்றி செய்யப்பட்ட விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததையடுத்து, அவர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் வெளியிடப்படாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “தமிழிலிருந்துதான் கன்னடம் உருவாயிற்று” எனக் கூறினார். இது கன்னட சமூக அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி, அவருக்கு எதிராக பலர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவின் கலை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறுகையில், “கமல்ஹாசனின் கருத்துகள் கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளன. அவர் மன்னிப்பு கேட்டால்தான் அவரது படம் கர்நாடகாவில் திரையிடப்படும்” என்று எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “நான் தவறு செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க தேவையில்லை” என மறுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, ‘தக் லைஃப்’ படத்துக்கு திரையிட தடை விதித்தது.
இந்நிலையில், கமல்ஹாசன் தரப்பில் அவரது சட்டத்தரணி தயான் சென்னப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் தெரிவித்ததாவது: “திரைப்படத் தடை கமல்ஹாசனின் கருத்துரிமைக்கு எதிரானது. அவர் கன்னட மக்களைக் குறைத்து எதையும் கூறவில்லை. விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன் உள்ள நெருக்கத்தையினால் அவர் அவ்வாறு பேசியதாகத் தெரிய வருகிறது. ₹300 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் தடைசெய்யப்படுவதால் நஷ்டம் ஏற்படும். எனவே திரைப்படம் திரையிட அனுமதி வழங்கப்படவேண்டும், பாதுகாப்பும் தரப்படவேண்டும்” என்றார்.
நீதிபதி நாகபிரசன்னா கேட்ட கேள்வி: “தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது” என்பதற்கான ஆதாரம் என்ன? கமல்ஹாசன் மொழியியல் நிபுணரா? வரலாற்று ஆய்வாளரா? அவரது இந்தக் கருத்து மக்கள் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. ஏன் அவர் மன்னிப்பு கேட்கக் கூடாது? வணிக நஷ்டத்தை மையமாகக் கொண்டு இப்போது நீதிமன்றத்தை நாடுகிறாரே தவிர, உண்மையான பரிதாபம் இல்லை. மன்னிப்பே இல்லாதபோது, அவரின் படம் ஏன் வெளியிடப்பட வேண்டும்?”
நீதிபதி கூறிய முக்கியக் குறிப்புகள்:
- பிரபலங்கள் பொது வெளியில் பேசும் போது உணர்ச்சிகளை மதிக்க வேண்டும்.
- மொழி, நிலம், நீர் – இந்த மூன்று கர்நாடக மக்களுக்கு முக்கியமானவை.
- மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை உடனடியாக தீரும்.
மீண்டும் பிற்பகல் விசாரணைக்குப் பிறகு, கமல்ஹாசன் எழுதிய கடிதமும், அவர் பேசிய வீடியோவையும் சமர்ப்பித்தனர். ஆனால் அதில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை இல்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
நீதிபதி விமர்சனம்:
“மன்னிப்பு கேட்காமல் சுற்றி வளைத்து எழுதுவதற்கு காரணம் என்ன? கமல்ஹாசனுக்கு ஈகோ இருக்கிறதா? கன்னட மொழியை மதிக்கிறார் என்றாலும், மன்னிப்பு கேட்பதில் தடுமாற்றமில்லை. மேலும், அவர் தனது உரையில் ‘தமிழிலிருந்து கன்னடம் வந்தது’ எனத் தெளிவாக கூறியுள்ளார்,” என்றார்.
கமல்ஹாசன் தரப்பு பதில்:
“தவறாக எதுவும் பேசவில்லை என்பதால் மன்னிப்பு கேட்க தேவையில்லை. தற்போதைக்கு ‘தக் லைஃப்’ திரைப்பட வெளியீட்டை ஒத்திவைக்க விரும்புகிறோம். அரசு மற்றும் திரையரங்க சங்கத்துடன் ஆலோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும்” எனக் கூறினர். நீதிபதி வழக்கை ஜூன் 10க்கு ஒத்திவைத்தார்.
கடந்த நிகழ்வுகளை நீதிபதி எடுத்துக்காட்டு:
ராஜாஜி 1950-களில் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். ‘காலா’ திரைப்படம் தொடர்பான சர்ச்சையில் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டார். அதேபோல், கமல்ஹாசனும் மன்னிப்பு கேட்கலாம் என்றார் நீதிபதி.