ஆர்சிபி கொண்டாட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசு, அணி நிர்வாகமே பொறுப்பு: அன்புமணி

0

“பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, கர்நாடக அரசு மற்றும் ஆர்சிபி அணியின் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை முன்னிட்டு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இன்று நடத்தப்பட்ட வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி எனக்குத் திகைப்பையும், மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதால், ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் உற்சாகம் ஏற்கனவே தெரிந்ததுதான். இதனையடுத்து வெறும் 12 மணி நேரத்திலேயே வெற்றிக்கொண்டாட்டம் திட்டமிடப்பட்டது. இதில் மிகப்பெரிய கூட்டம் திரளும் என்பதைக் கணித்து, சீரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது, இந்த நிகழ்வை சில நாட்கள் பின்னே தள்ளி வைத்திருக்க வேண்டியிருந்தது. இந்த தவறுகளை ஏற்படுத்தியவர்களே இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள்.

இந்தக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுதாபங்களும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பலர் இன்னும் உயிர் அபாயத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை காக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here