தெற்கு ரயில்வே திட்ட நிதியில் மாற்றமில்லை என ரயில்வே அமைச்சகம் உறுதி
தமிழகம் மற்றும் கேரளாவில் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள 12 ரயில்வே திட்டங்களுக்கு ரூ.727 கோடி திருப்பியமைக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்னதாகவே விளக்கம் வழங்கியது.
இந்நிலையில், திட்ட நிதியில் மாற்றம் இல்லை என்பது குறித்து, ரயில்வே அமைச்சகம் தீர்மானம் செய்து தெற்கு ரயில்வேக்கு அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பான செய்தியை தெற்கு ரயில்வே மீண்டும் வெளியிட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடப்பு காலாண்டில் பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த நிதியை எதிர்கால காலாண்டுகளில் பயன்படுத்தும் நோக்குடன், ரயில்வே வாரியத்துடன் தெற்கு ரயில்வே வழக்கமான அதிகாரப்பூர்வ கடிதங்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தது. ஆனால் இதை சில ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025–26 நிதியாண்டுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அசல் நிதியை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் மற்றும் கேரளாவில் ரயில்வே திட்டங்கள் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.