மழையால் மின்தடை ஏற்பட்டதால் தேர்வில் முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறிய மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. அன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சில தேர்வு மையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில், ஆவடி கேந்திரிய வித்யாலயா மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள், குன்றத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதிய 2 மாணவர்கள் மற்றும் கே கே நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஒரு மாணவர் அடங்குகின்றனர்.
இவ்வழக்குகளில், மே 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை செல்லாததாக்கி, மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீட் தேர்வுக்கு மின்தடை காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர் என்றும் தேசிய தேர்வுகள் முகமை (NTA) விளக்கம் அளித்தது.
இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்த நீதிபதி சி. குமரப்பன், தேர்வை மீண்டும் நடத்துமாறு உத்தரவு விடுப்பது 22 லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால், மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து இன்று (ஜூன் 6) தீர்ப்பளித்தார்.