மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹச். ஜவாஹிருல்லா கூறியதாவது:
தவெகக் கட்சி தலைவர் விஜய் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை என்பதை அவருடைய செயற்பாடுகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. மத்திய அரசின் அதிகாரியாக இருந்து, அவரது இல்லத்தில் சோதனை நடத்திய ஒருவரைத் தான் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்ததன் மூலம், விஜய் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூலை 6ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதுரையில் சிறுபான்மை சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கும், வக்பு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கும் வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படும்.
அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது:
தற்போது நாடாளுமன்றத்தில் 776 உறுப்பினர்களில் 39 பேர் மட்டுமே முஸ்லிம்கள். மக்களவையில் 24, மாநிலங்களவையில் 15 பேர் உள்ளனர். மக்களவையில் இது 4.42% மட்டுமே. இந்தியாவில் 28 மாநிலங்களில் 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டும் முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களின் நிலை:
தமிழகத்தில் முஸ்லிம்கள் 7% மக்கள் தொகையை கொண்டுள்ளதாலும், 234 எம்எல்ஏ இடங்களில் குறைந்தபட்சம் 14 பேர் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளிலும் இது போன்ற குறைபாடுகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 9% முஸ்லிம்கள் இருக்க, அவர்களில் நால்வர் மட்டுமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
தகவல்கள் மற்றும் கோரிக்கைகள்:
இந்தியாவில் ஐ.நா-வின் சிபாரிசுகளின்படி சிறுபான்மையினருக்கு தனித் தொகுதி வழங்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நடை பெறுகின்றன. பாசிசத்தை எதிர்க்கும் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்தும் இருக்கும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.