பழனிசாமிக்கு அதிகாரமில்லை – புகழேந்தி மறுபடியும் புகார்
அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்காக ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறாகும் எனவும், அவருக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் வா.புகழேந்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களின் மனுக்களில் பழனிசாமி பொதுச் செயலாளராக கையெழுத்திட்டதை ஏற்கக்கூடாது என்றும், மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் அந்த மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், புகழேந்தியின் புகாரை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன் விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது, புகழேந்தி மறுமுறை கடிதம் எழுதி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் 34வது இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையம் பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்கவில்லை என்பதைக் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பழனிசாமியின் கையொப்பம் தவறானது என்றும், அவருக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்றும், அவரால் கையெழுத்திடப்பட்ட ஏ மற்றும் பி படிவங்களை ஏற்கும் பட்சத்தில் அது சட்டவிரோதமாகும் என்றும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக அமையும் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.