மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை அவர் சென்னையின் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் மைய அலுவலகத்திற்கு வந்தார். அவரை வரவேற்கும் நிகழ்வில் பட்டாசுகள் வெடித்தும், மேளதாள இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறிய வழிகாட்டலின்படி, பெரும்பாலானோர் பூங்கொத்து மற்றும் பொன்னாடிக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
அதே நேரத்தில், ஒரு நிர்வாகி கமல்ஹாசனுக்கு வீரவாளை பரிசளிக்க முயன்றார். ஆனால், கையில் ஆயுதம் எடுக்கக்கூடாது எனக் கூறிய கமல்ஹாசன், அதை நிராகரித்து, “வாள் கையில் அல்ல, தரையில் இருக்கவேண்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். உடனே அந்த வாள் தரையில் வைக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், ஊடகப்பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.