மணப்பாக்கம் பகுதியில் கர்டர் விழுந்த விபத்து: 3 நிறுவனங்களுக்கு மெட்ரோ நிறுவனம் உத்தரவு

0

மணப்பாக்கம் பகுதியில் கர்டர் விழுந்த விபத்து: 3 நிறுவனங்களுக்கு மெட்ரோ நிறுவனம் உத்தரவு

மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பால பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் வகையில், உயர்மட்ட வழித்தடங்களுக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் மூன்று நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ நிறுவனம் உத்தரவு வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் 3-வது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நந்தம்பாக்கம் அருகே விபத்து, ஒருவர் உயிரிழப்பு

இந்நிலையில், நந்தம்பாக்கம் அருகே இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது, மணப்பாக்கம் L&T நிறுவன நுழைவுவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய கர்டர்கள் கடந்த 12ம் தேதி இரவில் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் நாகர்கோவில் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்குப் பின்னர், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பாதுகாப்பு நிலையை உறுதி செய்து, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மெட்ரோ நிறுவனம் உத்தரவு வழங்கியுள்ளது.

10,000-க்கும் மேற்பட்ட கர்டர்கள் அமைக்கப்படும் திட்டம்

மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில், மெட்ரோ நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மேம்பாலங்களுக்கு தேவையான 10,000-க்கும் மேற்பட்ட ஐ-கார்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இரண்டு கர்டர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கர்டர்களின் ஆதரவு அமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான வரைபடங்களுடன் கூடுதல் ஆதரவு அமைப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக 76 கி.மீ. நீளமுள்ள இந்த உயர்மட்ட வழித்தட திட்டத்தில் தற்போது பணிகளில் ஈடுபட்டுள்ள மூன்று நிறுவனங்களும், கட்டுமானத்தின் பாதுகாப்பு நிலையை உறுதி செய்யும் வகையில் விரைந்து அறிக்கைகள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here