‘நீங்கள் சொல்வதை செய்கிறேன்’ – ராமதாஸிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட அன்புமணி வாக்குறுதி

0

“எனக்குச் சொந்தமாக ஏதாவது தவறு ஏற்பட்டிருக்குமானால், தயவுசெய்து அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் என்ன செய்யவேண்டும் எனக் கூறுங்கள்; ஒரு மகனாகவும், கட்சித் தலைவராகவும் அதைச் செய்யத் தயார். தயவுசெய்து நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம், கவலைப்பட வேண்டாம், கோபப்பட வேண்டாம். இன்று நீங்கள் நம் கட்சியின் தேசியத் தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஒரு நிகழ்வில் உங்களை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என புகழ்ந்தார்,” என்று கூறினார் அன்புமணி.

திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், பாமக கடந்த 36 ஆண்டுகளாக சமூகநீதிக்காக போராடிவரும் கட்சி எனக் குறிப்பிட்டார். கட்சி நிறுவப்பட்ட நோக்கம் ஆட்சியை பெறுவது, அதன் வாயிலாக தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதுதான் என தெரிவித்தார்.

ராமதாஸ் அவர்கள் பாமக ஆரம்பிப்பதற்குப் பின் சமூகநீதிக்காக வன்னியர் சங்கம் மூலமாக தொடங்கிய போராட்டங்களை நினைவூட்டிய அன்புமணி, திமுகவினர் சமூகநீதியைப் பற்றி பேசினாலும் நடைமுறைப்படுத்தவில்லை என சாடினார். மேலும், திமுக சமூகநீதிக்குத் துரோகம் செய்த கட்சி என்றும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் சமூகநீதியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என்றும் கூறினார்.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைய உறுப்பினர்கள் இருப்பினும், சமூகநீதிக்காக எந்தக் காரியமும் செய்யாததைக் கண்டித்தார். சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி திமுகவிடம் கோரிக்கை வைத்திருந்த போதிலும், அதற்கான நம்பிக்கை இல்லை என்பதால் மக்கள் மத்தியில் இதை பிரச்சாரமாக மாற்றவேண்டும் என்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக வென்று ஆட்சியில் பங்கேற்கும் என்றும், தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டுமானால் பாமக ஆட்சியிலேயே அது சாத்தியம் என்றும் கூறினார்.

ஜூலை 24ம் தேதி ராமதாஸ் பிறந்தநாளில் ‘உரிமை மீட்பு நடைபயணம்’ தொடங்கப்போகிறேன். 100 நாட்கள் தமிழகமெங்கும் சுற்றிப்பார்த்து மக்களை சந்திக்கப்போகிறேன். திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என அவர் வலியுறுத்தினார்.

உலக தந்தையர் தினத்தையொட்டி, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்த அவர், “அவர் சீரான உடல் நலத்தோடு, மன நிம்மதியோடு, நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்; ஒரு மகனாக இது என் கடமை” என்றார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சிகிச்சை எடுத்துக்கொண்ட ராமதாஸ் தற்போது சுகர், பிபி போன்ற சிக்கல்களால் பாதிக்கப்படுவதால் அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். “நான் என்ன செய்யவேண்டும் எனத் தெரிவியுங்கள்; அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார். “இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம்” என்று உறுதியளித்தார்.

அதற்கு முன்னதாக, தந்தையர் தினத்தை முன்னிட்டு எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்:

“தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.

ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,

அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.

தந்தையர் நாளில் மட்டுமின்றி

எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!”

இதையடுத்து சில மணி நேரங்களில் அவரது உரையில் மன்னிப்பும் கேட்டதாக குறிப்பிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here