ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடக்கம்

0

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ரூ.3 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கு, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜூலை 16-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான ரவீந்திரன், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். இதன்பேரில் 2021 நவம்பரில், அதிமுகவின் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் மோசடிக்கான மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேநாளில் மற்றொரு புகாரின் அடிப்படையில், பலரிடம் வேலை வாய்ப்பு பேரில் பணம் வசூலித்து, விஜய் நல்லதம்பி ரூ.3 கோடி தொகையை ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபு ராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய நால்வருக்கும் எதிராக மேலும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவிட்டார். குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி அந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்தனர்.

மே 19-ம் தேதி, இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது, ஜூலை 16-ம் தேதியுடன் விசாரணை தொடங்கும் வகையில் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here