“சிறப்பாக பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு” – உதயநிதி

0

தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சிறந்த செயல்பாடுடைய நிர்வாகிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து, வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரிவாக பரிசீலனை செய்தார். கூட்டத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலர் ஆர்.வி. ஷஜீவனா மற்றும் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற விழாவில், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 16 துறைகளின் சார்பில், 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார். பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மூன்று புதிய வழித்தடங்களுக்கு 9 மினி பேருந்துகள் சேவையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் எம்எல்ஏக்கள் என். ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதுராபுரி அருகேயுள்ள திருமண மண்டபத்தில், திமுகவின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 23 துணை அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி, “மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, நேரடி பிரச்சாரம் செய்து, திமுக அரசின் சாதனைகளை விளக்குங்கள். சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

மேலும், “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் எதிர்த்து தயார் நிலையில் உள்ளனர். மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல பொய்களைப் பரப்பியுள்ளார். ஊழலில் சிக்கிய அதிமுகவுடன் சேர்ந்து திமுகவை விமர்சிப்பதற்கான நியாயம் அவருக்கு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here