திருநெல்வேலியில் பணியாற்றிய எஸ்பி அருண் திடீரென ராஜினாமா
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் உள்ள சிறப்பு காவல்படையில் சூப்பிரண்டு (எஸ்பி) பதவியில் கமாண்டராக இருந்த அருண் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த மார்ச் மாதம், ஆயுதப்படை பிரிவின் கூடுதல் டிஜிபி ஜெயராமை நேரில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், “வேலை எனக்கு பிடிக்கவில்லை; எனவே ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது ராஜினாமா சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது ராஜினாமாவுக்கான பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அருண். அதன் அடிப்படையில் டிஎஸ்பி பதவியில் காவல்துறையில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வுடன் கூடுதல் எஸ்பியாக பணி பெற்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் மணிமுத்தாறு பிரிவில் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.
இதே நேரத்தில், அவரது அதிகாரிகள் கார்த்திக் மற்றும் சங்கு ஆகியோர் சென்னையில் துணை ஆணையர் பதவியில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் மணிமுத்தாறு பகுதியில் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மனவெதும்பலுக்கு உள்ளாகி அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.