மத்திய அரசின் நடவடிக்கை தென்னிந்திய வரலாற்றுக்கு எதிரானது” — சு. வெங்கடேசன்
தென்னிந்திய வரலாற்றை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, கீழடி அகழாய்வில் முக்கிய பங்கு வகித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் குறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் சிறப்பாக பங்கேற்று வந்தார். 2017-இல் அகழாய்வில் இருந்து விலக்கப்பட்ட அவர், நீதிமன்றம் வழியாக மீண்டும் ஆய்வறிக்கை எழுத உரிமை பெற்றார். அதன்பின் கோவாவுக்கு மாற்றப்பட்டதால் அறிக்கை எழுத இயலவில்லை. பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அறிக்கையை தயார் செய்தார். ஆனால் அந்த அறிக்கை இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில், மேலும் அறிவியல் ஆதாரம் தேவை என கூறி மே 21-ம் தேதி கடிதம் அனுப்பியதும், தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தும் பிரிவுக்கு மாற்றப்பட்டதும், மத்திய அரசின் நோக்கம் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என அவர் கூறினார். “அவர் இயக்குநர் மட்டுமல்ல; முக்கிய ஆய்வாளர். அவரை தனிமைப்படுத்துவது, மத்திய அரசு மேற்கொண்டு வரும் பழிவாங்கும் செயல்” எனவும் கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் வரலாற்று உண்மைகளை ஒளித்துவைக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. இதற்கு தமிழக மக்கள் அரசியல் முறையில் பதிலளிப்பார்கள்” என்றும் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
சந்திப்பின் போது புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் மற்றும் பா. ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.