வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பாக விசாரணை நடத்திய ஆய்வாளரை காவல் ஆணையர் பாராட்டினார்
2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, எழும்பூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஒரு தனியார் ஓட்டலின் அருகே, சாலையில் நடந்துசென்ற 25 வயது இளைஞர் மீது இருவரால் வழிப்பறி தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் அவரது பாக்கெட்டிலிருந்த பணத்தை பறித்துவிட்டு, அவரை சாலையில் தள்ளினர். அதே சமயம் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கருணாகரன் தலைமையிலான குழுவினர், வழிப்பறி மற்றும் ஆதாய நோக்கத்துடன் நடந்த கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, மதுரை முத்து என்கிற கமல் (28) என்பவரும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள 21-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த மே 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதன்மை குற்றவாளி மதுரை முத்துவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை முறையாக விசாரித்து, குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வழிவகுத்த காவல் ஆய்வாளர் கருணாகரனை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவருக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.