தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி நிதியுதவி – 120 புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனுமதி
தொலைத்தொடர்பு துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கி, 120 ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சென்னை ஐஐடி இணைந்து நடத்தும் “தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி” குறித்த 3 நாள் கருத்தரங்கம் நேற்று தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் தொடங்கியது. தொடக்க விழாவைத் திறந்துவைத்த நீரஜ் மிட்டல் பேசும் போது கூறியதாவது:
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டம், உள்நாட்டிலேயே தொடக்க நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அமையப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மொத்தம் 120 ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ரூ.500 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களின் கீழ் 5ஜி தொழில்நுட்பம், ட்ரோன்கள் மூலம் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், குவாண்டம் தொடர்புடைய தொலைத்தொடர்பு ஆகியன முக்கியமான துறைகளாக இருக்கின்றன.
தொலைத்தொடர்பு துறையில் ஆராய்ச்சி முன்னேற்றங்களை அடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், இந்த திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டால், அவற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் செயலர் குல்சார் நடராஜன், துணை டைரக்டர் ஜெனரல் பராக் அகர்வால், சென்னை ஐஐடி இயக்குநர் வீ. காமகோடி, பேராசிரியர் ஆர். கே. காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.