விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு புகார்கள் எழுப்பினர்

0

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு புகார்கள் எழுப்பினர்

மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், எம்எல்ஏ பரிந்துரை பெற்ற விவசாயிகளுக்கே பயிர் கடன் வழங்கப்படுவதாகவும், முறையாக கடன் செலுத்திய விவசாயர்களை தவிர்க்கின்றனர் என்றும், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை பொறியாளர் பாரதிதாசன், நேர்முக உதவியாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்த விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தினர்.

விவசாயி மூக்கன் புகார்:
கே.போத்தம்பட்டி வங்கியில் கடனை தவறாது செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் கடன் மறுக்கப்படுகிறது. எம்எல்ஏ பரிந்துரை பெற்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆட்சியர் பதில்:
எம்எல்ஏ பரிந்துரை இல்லாதவர்களுக்கும் கடனைச் செலுத்தியிருப்பின், பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும்.

மணவாளக் கண்ணன்:
செல்லம்பட்டி ஒன்றியத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு 20 நாட்கள் ஆகியும், நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. விஏஓ, வேளாண் அலுவலர்கள் தவறான தகவல்கள் வழங்கியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியர் பதில்:
விஏஓ அளித்த சாகுபடி பரப்பளவின் அடிப்படையில் கொள்முதல் மையம் திறக்கப்படுகிறது. விஏஓ அறிக்கையை சரிபார்க்கலாம்.

மணி:
கொட்டாம்பட்டியில் அரசு விதிகளை மீறி கல் குவாரிகள் செயல்படுகின்றன. ஓடைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. உயிரிழப்புகள் ஏற்பட்ட குவாரி அதே குழுவால் காடம்பட்டியில் கிரஷர் அமைக்கப்படுகிறது.

ஆட்சியர் பதில்:
புதிய கனிமவள அதிகாரி அந்த பகுதியில் விரைவில் ஆய்வு நடத்த வேண்டும். டிரோன் ஆய்வின் அறிக்கையும் விரைவில் அனுப்ப வேண்டும்.

ரவி:
கொட்டகுடி கண்மாயிலுள்ள மடைக்குள் இருந்து ஆழமாக வண்டல் மண் எடுக்கப்படுவதால் தண்ணீர் ஓட்டம் தடைப்படுகிறது.

ஆட்சியர் பதில்:
பொதுப்பணித்துறை பொறியாளர் கண்காணிப்பில் மண் எடுக்கப்பட வேண்டும். ஆழமாக எடுக்கப்பட்டிருந்தால் அபராதம் விதிக்க வேண்டும்.

மிரட்டும் விவசாயி சம்பவம்:

தோட்டக்கலைத் துறையில் தேனீ வளர்ப்பு திட்டம் தொடர்பான முறைகேடு குறித்து ஒரு விவசாயி கூட்டத்தில் புகார் தெரிவித்தார். பின்னர், அவர் அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, அவரை நேரில் பார்த்த அலுவலர்கள் – நேர்முக உதவியாளர் சாந்தி, வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி – புகார் தெரிவித்தனர்.

அந்த விவசாயி, லஞ்சம் கேட்டு, நிலம் வாங்கித் தருமாறு மிரட்டியதாகவும், இதனை நிராகரித்ததால் கூட்டத்தில் பொய் புகார் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். அவரை அதிகாரிகளும் விவசாயிகளும் ஆறுதல் கூறி, “தைரியமாக இருங்கள், நாங்கள் ஆட்சியரிடம் புகார் தருகிறோம்” என உறுதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here