மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கான வாகன பாஸ் நிபந்தனை ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்கள் வருவதற்கான பாஸ் கட்டாயம் என்பதற்கான நிபந்தனையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த மாநாட்டுக்கு போலீஸார் 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர். இதில், வாகன பாஸ் உள்ளிட்ட ஆறு நிபந்தனைகளுக்கு எதிராக இந்து முன்னணி மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ் தேவை என்பதை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், பாஸ் விண்ணப்பங்கள் 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், நிராகரிக்கப்படும் பட்சத்தில் காரணம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர், கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு வழங்கப்படும் இ-பாஸ் போன்று, முருக பக்தர்களுக்கும் இ-பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி இ-பாஸ் வழங்க உத்தரவிட முடியாது என்றும், ஜூன் 21 காலை 10 மணி வரை பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அதை நிராகரித்து, மீண்டும் உயர்நீதிமன்றத்தையே அணுக உத்தரவிட்டது. இதன்படி மேல்முறையீடு மனு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ராஜசேகர் அமர்வு, “மதுரை மாவட்டத்திற்குள் வாகன அனுமதி பாஸ் இல்லாமல் நுழைய முடியாது என உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை” எனக் கூறிய இந்து முன்னணி தரப்பின் வாதத்தையும், “வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் விதிக்கப்பட்டது, தடையில்லை” என அரசு தரப்பின் பதிலும் கேட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள், “அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா?” என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில், “நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்கள் இல்லாவிட்டால் வாகனங்கள் அனுமதிக்கப்படாது, பறிமுதல் செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் இறுதியாக கூறியது:
“முருக பக்தர்கள் மாநாட்டுக்கான வாகன பாஸ் நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில் போலீஸ் பூத் அமைக்கப்பட வேண்டும். வாகன ஓட்டுநரின் உரிமம், காப்பீடு, ஆதார், வாகன பதிவு சான்று போன்ற ஆவணங்கள் போலீஸ் பூத்தில் சரிபார்க்கப்பட வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட பின் மட்டுமே மாநாட்டுக்குள் வாகனங்களை அனுமதிக்கலாம்” என்றனர்.