“பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும், அந்தக் கட்சியின் உண்மை முகத்தைத் தமிழர்கள் தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள்; எனவே, அவர்கள் ஏமாறவே மாட்டார்கள்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகள் மற்றும் பெருநிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதற்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெருநிறுவனங்களுக்கு நன்மை ஏற்படச் செய்யும் பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்கள் லாபம் ஈட்டும் சூழலை உருவாக்கி உள்ளது. இதனால், அதானி மற்றும் அம்பானி போன்றவர்கள் சொத்துகளை அபரிமிதமாக பெருக்கியுள்ளனர் என்பது, ‘தி எகனமிஸ்ட்’ மற்றும் ‘ஆக்ஸ்பாம்’ போன்ற அமைப்புகளால் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
மோடி இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றியுள்ளாரா என்பதை விட, அதானி உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியே உள்ளன. பாஜக, கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெறும் நன்கொடைகளால் தனது தேர்தல் நிதியை பெருக்கி, மக்களவை தேர்தல்களை நிதிச் சுமையின்றி எதிர்கொள்கிறது.
2019, 2024 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய நிதி ஆதரவுடன் போட்டியிட்டது. ஆனால் மற்ற எதிர்கட்சிகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது. சமநிலை இல்லாத தேர்தல் சூழ்நிலை உருவானது. ‘ஜனநாயக சீர்திருத்த சங்கம்’ எனும் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2024 மக்களவைத் தேர்தலில் 32 கட்சிகள் மொத்தமாக ரூ. 3,352 கோடி செலவழித்திருக்கின்றன. இதில் பாஜக தனியாகவே ரூ. 1,494 கோடி செலவிட்டுள்ளது – இது மொத்த செலவின் 44.56 சதவிகிதமாகும்.
இந்த அளவிலான நிதி ஆதரவு, பாஜகவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னணியாக இருக்கிறது. தேர்தல் ஆணையம், இந்த விதமான அநீதிகளை தடுக்கத் தவறி இருக்கிறது. மோடி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அமைப்பு பாஜகக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் ஏற்படும் முறைகேடுகள் கூட தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு நடைபெறுகின்றன.
தேர்தலின் போது பதிவு செய்யப்படும் சிசிடிவி வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை 45 நாட்களுக்குப் பிறகு அழிக்கப்படும் என்ற முடிவும், நேர்மையான தேர்தலுக்கு எதிரான செயற்பாடாகும். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான சாட்சிகள் தேவைப்படும் சூழ்நிலைகளை தடுக்கவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, பாஜகவுக்காக செயல்படுகின்ற தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய காலம் வரும்” எனப் பேசியுள்ளார். இது, இந்திய அரசமைப்பில் ஆட்சி மொழிகளாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இருப்பதை எதிர்க்கும் வகையிலான கருத்தாகும்.
1961-இல், பண்டித நேரு கூறியபடி, ஹிந்தியைப் பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சிகளில், இது சட்ட ரீதியாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் தற்போது அமித் ஷா அந்த உறுதிமொழிக்கு எதிரான கருத்துகளை வெளியிடுகிறார். இது தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிரானது.
மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தென் மாநிலங்களில் பரப்புரை மேற்கொள்ளும் போது, ஆங்கிலம் தெரிந்திருந்தும் ஹிந்தியிலேயே பேசுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் பிரதமர்கள், மக்களுக்கு புரியும் மொழியில் — குறிப்பாக ஆங்கிலத்தில் — உரையாற்றுவார்கள். இது அவர்களது பரிபக்குவத்தையும் ஜனநாயக நெறிமுறைகளையும் காட்டுகிறது.
அமித் ஷாவின் இந்த கருத்தைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்துள்ளார். “ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் உலகத் தரத்தில் போட்டியிடும் திறன் உருவாகிறது” என்ற அவரது பார்வை, இந்தியாவில் ஒற்றுமையை உறுதியளிக்கின்றது.
எனவே, பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும், தமிழ் மக்களின் விழிப்புணர்வை மாற்ற முடியாது. அவர்களால் ஏமாற்ற முடியாது” என அவர் கூறியுள்ளார்.