முருக பக்தர்கள் மாநாடு நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

0

“முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் மாற்றத்திற்கான வாயிலைத் திறக்கும், நற்சிந்தனை உடையவர்கள் மக்களுக்காக செயல்படும் சூழலை உருவாக்கும்,” எனத் தெரிவித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

மதுரை மாவட்டம் வண்டியூர் டோல் கேட் அருகே நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு விழாவில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வருகை தந்து தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் எம்.பி. உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன் மற்றும் மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறுகையில்,

“மதுரை என்பது புனிதமான நகரமாகும்; இங்கு முருகனின் இரண்டு அறுபடை வீடுகள் உள்ளன. அதேபோல் இம்மாநாட்டில் மாதிரிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சுலபமாக தரிசிக்க வேண்டி இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் தொடர்பில்லை.”

“ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் ஒழுக்கத்தையும் பண்பையும் வளமாக்கும் அடித்தளமாக இருக்கிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தமிழர் அனைவரும் வணங்க வேண்டும். அதனால் நானும் இன்று வந்து தரிசனம் செய்தேன். ஆன்மிகம் என்பது ஜாதி, மதம், மொழி, இன எல்லைகளைத் தாண்டியது. இம்மாநாடு ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாக அமையும். மக்கள் நலனுக்காக செயல்பட விரும்பும் நற்பண்புடையவர்கள் மேடையில் வர வாய்ப்பு உருவாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இது முருக பக்தர்கள் மாநாடு என்பதால் அதில் அரசியல், மதம், ஜாதி என எந்தப் பிரிவினையும் நுழைய விடக்கூடாது. இந்தப் போன்ற ஆன்மிக மாநாடுகள் ஒற்றுமைக்கும் சமூக நலனுக்கும் பயனாகும். அது மசூதி விழா, சர்ச் விழா என எங்கே நடந்தாலும் ஆன்மிக உணர்வு கொண்டவர்கள் சமூக நலனுக்காக செயல்படுவர். இதுபோன்ற நிகழ்வுகளில் தடைகள் ஏற்படுத்த முயன்றாலும், அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஆன்மிகத்திடம் உண்டு” எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here