மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் சேர்ந்து வருகின்றனர்.
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் மாநாட்டை ஒட்டி, அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பெருந்திரளான பக்தர்களால் தரிசனம் செய்யப்படுகின்றன. நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.
இன்றைய மாநாடு மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.
மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 5,000க்கும் மேற்பட்டோர் வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேடையை திருப்பரங்குன்றம் கோயிலின் வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆன்மிக அமைப்பினர் மதுரைக்கு வாகனங்களில் புறப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1,500 போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆளுநர் ரவி தரிசனம்
மாநாட்டு வளாகத்திற்கு நேற்று காலை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அவர் தரிசனம் செய்தார். பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்கிறோம். சிவபெருமானின் புதல்வர் முருகன் நம் பண்பாட்டு அடையாளம். அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதை ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு வாழ்த்துகள்,” என கூறினார்.