தமிழக அரசுக்கு புகையிலை தடுப்பு விருது – முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து பெற்றார்
‘புகையிலை இல்லாத இளைஞர்கள்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தால் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
2007 முதல் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. 2003-ல் உருவாக்கப்பட்ட புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ், பொதுமிடங்களில் புகைபிடித்தல், விளம்பரங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
2008 அக்டோபர் 2 முதல் 2024 ஜனவரி 31 வரை, 3.89 லட்சம் பேர் மீது ரூ.6.83 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 45,374 பள்ளிகள், 2,153 கல்லூரிகள் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாகவும், 1,240 கிராமங்கள் புகையிலை இல்லா கிராமங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. புகைகுழல் கூடங்களும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.
2024-ல், 60 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக ‘புகையிலை இல்லாத இளைஞர்கள் 2.0’ திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பீட்டு கூட்டத்தில் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
இந்த விருதை முதல்வரிடம் காண்பிக்க-s, அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் சுகாதார துறை செயலர் செந்தில்குமார் மற்றும் இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.