மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: “அநீதிக்கு எதிராக இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்” – பவன் கல்யாண் அழைப்பு
மதுரையில் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் திரண்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு தேவையில்லை என்பதால், அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்தனர்.
மாநாட்டின் மேடைகள் வெவ்வேறு பிரமுகர்கள், சாதுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கப்பட்டது. இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பவன் கல்யாண் உரையில், மதுரையில் முருகப் பெருமானின் அருள் பெரும் மக்களே புண்ணியவான்கள் எனக் கூறினார். “நமது கலாச்சாரத்தை அழிக்க முடியாது. அறம் என்பது தீமையை அழிப்பது. உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். இந்தியா முழுக்க இந்துக்கள் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராக பேச வேண்டிய தருணம் இது. முருகனைப் பற்றி கேள்வி எழுப்புவது போலி மதச்சார்பின்மையை காட்டுகிறது. எங்கள் மதத்துக்கு மரியாதை இல்லையெனினும், அவமரியாதை செய்ய வேண்டாம்,” எனக் கூறினார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, இரவு 8.04 மணிக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடி ஆனந்த நிலைக்குள் திளைத்தனர். பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்து பக்தர்களுடன் பாடினர்.
பின்னர், அறுபடை வீடுகள் மற்றும் பெரிய முருகன் சிலைக்கு தீபாராதனை செய்யப்பட்டது. கடைசியில், “நான் இந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்ற உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. மத மாற்றங்களைத் தடுக்கவும், இந்து மதத்தை பாதுகாக்கவும் உறுதி தெரிவிக்கப்பட்டது.