மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

0

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தில் சேர தவறிவிட்ட பெண்கள், வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் 10,000 சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 20 வகை நலவாரியங்களில் உறுப்பினராக சேரும் வகையில், தூத்துக்குடி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நேற்று ஒரு சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

“அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென்று தனித்தனியாக நலவாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் இன்னும் பதிவு செய்யாத தொழிலாளர்கள் இம்முகாம்களின் வாயிலாக உறுப்பினராக சேரலாம். உறுப்பினர்களுக்கு அரசால் பல்வேறு நலன்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

முதல்வர் அறிவித்துள்ளதுபோல், ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பெண்கள், ஜூலை 15 முதல் புதியதாக விண்ணப்பிக்கலாம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தகுதியுள்ள பெண்களும் இதில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நலத்திட்டங்கள் மூலம் பெறும் நிதிக்காக கைரேகை மற்றும் கருவிழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here